நமக்குச் சொந்தமான நம் வீட்டு முற்றத்தில் மாற்றான் ஒருவன் காயலான் கடை வைத்து வியாபாரம் செய்தால் நாம் என்ன செய்வோம்? அதே வேலையை அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஒருவன் செய்தால் அரசு என்ன செய்யும்? செய்ய வேண்டும்? அனைவரும் ஒருமித்தக் குரலில் ஏற்றுக் கொள்வது, அரசு இடத்தைக் கள்ளத்தனமாக ஆக்ரமித்தவனை சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்; ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். அதுவே அரசு இடத்தில் கள்ளத்தனமாகப் பள்ளிவாசல், சர்ச், கோயில் இன்னபிற வழிபாட்டுத் தலங்களை யாராவது எழுப்பி விட்டால் என்ன செய்வது? சாதாரணமாக அரசு செய்யும் காரியம், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலத்துக்கு யாராவது பொறுப்பாளர் இருப்பின் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டு சம்பந்தப்பட்ட இடத்திலிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றி அவ்விடத்தை மீட்பதாகும். அவ்வாறு ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு என்னுமிடத்தில் நடந்தது. அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தை நீதிமன்ற ஆணையுடன் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளையும் உலகிலிருந்தே "அகற்றும்" பணி சுற்றிக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பட்டப்பகலிலேயே நடைபெற்றது. சம்பவம் என்னவெனப் பார்ப்போம்: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள உடையார்விளையில் சாலையோரம் நாராயணசாமி கோயில் என்றொரு கோயில் அரசு நிலத்தில் உள்ளது. இந்த கோயில் அரசின் புறம்போக்கு நிலத்தில் அமைந்திருப்பதாகவும் அதனால், கோயிலுக்குப் பின்புறம் உள்ள வீட்டுக்கு செல்ல கோயிலை இடித்து பாதை வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள், "அரசு நிலத்தில் உள்ள கோயிலின் சுவரை இடித்துப் பாதை அமைத்துக் கொடுக்க" உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக நெடுஞ்சாலைத்துறை தக்கலை உதவிக் கோட்ட அலுவலர் எல்.அந்தோணி சேவியர், இளநிலை அலுவலர் சி.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் காவல்துறைப் பாதுகாப்புடன் கோயில் சுவரை இடித்துக் கொண்டிருந்தனர். இதற்குக் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் அவ்விடத்தில் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அதிகாரிகள் தங்களுக்கு உயர்நீதிமன்றம் கட்டளையிட்ட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உதவிக் கோட்டப் பொறியாளர் அந்தோணி சேவியர், இளநிலை பொறியாளர் சுந்தரம் மற்றும் திருவட்டாறு காவல் சரகத்தைச் சேர்ந்த தலைமைக்காவலர் எட்வின் ஆகிய 3 பேரும் சாலையோரம் நின்று, இடிப்புப் பணியைக் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்து அவர்கள் 3 பேரையும் இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பொறியாளர் அந்தோணி சேவியர் படுகாயம் அடைந்துச் சிகிச்சைக்காக நாகர்கோயிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் மீது காரை மோதவிட்டதாகவும், அந்தக் காரை ஓட்டியவர் கோயில் தர்மகர்த்தா அர்ஜுனனின் மகன் செந்தில்குமார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக திருவட்டாறு காவல்துறையினர் அர்ஜுனன், அவருடைய மனைவி அனிஷ்பாய், மகன் செந்தில்குமார், அவரது வழக்கறிஞர் ரசல்ராஜ் உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் அர்ஜுனனும், அவருடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆக்ரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் அரசு ஆவணத்திற்காக ஆக்ரமிப்பு அகற்றும் பணியினை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வீடியோ பதிவில் அதிகாரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்றக் காட்சியும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
தங்களின் பணியினைச் செய்யச் சென்ற அரசு அதிகாரிகளின் மீது கார் ஏற்றும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கே கண்டு களியுங்கள்.
http://ibnlive.com/videos/58815/officials-want-security-after-highway-murder-attempt.html